பண்டித ஜவகர்லால் நேரு


பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள் 1889ஆம் ஆண்டு செல்வந்தர் மற்றும் வழக்கறிஞருமான மோதிலால் நேருவுக்கும் சுவருபராணி அம்மையாருக்கும் மூத்த குழந்தையாக உத்திர பிரதேசத்தில் உள்ள அலகாபாத்தில் பிறந்தார். உருது மொழியில்  'ஜவகர்லால்”என்ற சொல்லுக்கு 'சிகப்பு நகை” என்று பொருள். நேரு மற்றும் அவரின் இரு சகோதரிகளுமான, விஜயலட்சுமி பண்டிட் மற்றும் கிருஷ்ணாவும், ஆனந்தபவன் என்ற பெரியமாளிகையில்  இந்திய உயர் குடிமக்களால் அவசியமாகக் கருதப்பட்ட ஆங்கில நாகரிகத்துடன் வளர்க்கப்பட்டனர்.  நேரு இங்கிலாந்து சென்று தம் உயர் கல்வியை தொடர்ந்தார்.
1912 ஆம் ஆண்டு இந்தியா திரும்பியதும் வழக்கறிஞர் ஆனார். கமலா கவுல் என்ற காஷ்மீரி பிராமணப்பெண்ணை, 1916 பிப்ரவரி 8 இல் மணந்தார். அவர்களுக்கு இந்திராபிரியதர்சினி என்ற மகள் பிறந்தாள், பின்னாளில் அவர் இந்திரா காந்தி என்றழைக்கப்பட்டார்

1919 இல் ஜாலியன்வாலாபாகில் போராட்டக்காரர்களை ஆங்கிலேய அரசு கொன்று குவித்தது, இந்த சம்பவம் நேருவைக் கொதிப்படையச் செய்தது . அவர் தன் சக்தியை எல்லாம் சுதந்திர இயக்கத்திற்காக அர்ப்பணித்தார். நேரு, மிக வேகத்தில் காந்தியின் நம்பிக்கைக் குரிய வரானார். முதன் முதலில் இந்திய தேசிய காங்கிரசை, காந்தியின் வழிகாட்டலில் 1929 லாகூர் நிகழ்ச்சியில் தலைமை ஏற்று நடத்தினார். அவர் வாழ்நாளில் 9 வருடங்கள் சிறையில் கழிக்க வேண்டிவந்தது. சிறையில் இருந்த நாட்களில், நேரு உலக வரலாற்றின் காட்சிகள்(1934), சுயசரிதை, (1936) மற்றும் இந்தியாவின் கண்டுபிடிப்பு ஆகிய நூல்களை எழுதினார். இந்த படைப்புகள் ஒரு எழுத்தாளராக அவருக்கு பெருமை சேர்த்ததோடல்லாமல், இந்திய சுதந்திரஇயக்கத்தில் அவருடைய நற்பெயரை வளர்த்தது. இந்திய சுதந்திர இயக்கத்தில் அவருடைய அரசியல் கௌரவம் மகாத்மா காந்திக்கு அடுத்தப்படியாக மதிக்கப்பட்டது.

 இந்தியா சுதந்திரம் பெற்றதும்  சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஆனார். ஆகஸ்ட் 15 1947 புதுடில்லியில் சுதந்திர இந்தியாவின் கொடியை ஏற்றும் தனி பெருமை நேருவுக்கு கொடுக்கப்பட்டது. அன்றுமுதல் தன் வாழ்வின் இறுதிவரை சுதந்திர இந்தியாவை கட்டியெழுப்பும் பணிக்கு தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். மூன்று முறை ஐந்தாண்டு திட்டங்களை வகுத்து அவற்றை செவ்வனே நடத்தினார்.


குழந்தைகள் மீதும், ரோஜா மலர்கள் மீதும் நேரு அளவு கடந்த பற்றுதலை கொண்டிருந்தார். நேருவின் ஆட்சியில் இந்தியா முழுவதும் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் நலம், அவர்களின் கல்வி, முன்னேற்றம் குறித்து பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் தொழிற்நுட்ப கல்லூரிகளும் எய்ம்ஸ் போன்ற சர்வதேச தரத்திலான உயர் கல்வி நிறுவனங்களும் இந்தியாவில் துவக்கப் பட்டன. தனது அலுவலக பணிகளுக்கு மத்தியிலும் குழந்தைகளை சந்தித்து அவர்களுடன் உரையாடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். குழந்தைகளால் அவர் நேரு மாமா  என செல்லமாக அழைக்கப்பட்டார்.
குழந்தைகளை அவர் மிகவும் நேசித்ததால்தான் அவரது பிறந்தநாளை (நவம்பர் 14ஆம் நாள்) நாம் குழந்தைகள் தினமாக கொண்டாடுகிறோம். மே மாதம் 27 ஆம்நாள் நேரு அவர்கள் இறைபாதம் அடைந்தார்கள்






நேருவின் பொன்மொழிகள்:

  • வலுவான செயல்கள் தெளிவான முடிவை நோக்கியதாக இருக்க வேண்டும்.

  • விளைவுகளை வைத்துதான் செயல்களின் சிறப்பை மதிப்பிட முடியும்.

  • சொல்லும் செயலும் பொருந்தி வாழ்கின்ற மனிதனே உலகத்தில் மகிழ்ச்சியாக வாழும் மனிதன்

என்ன சொல்கிறாய் என்பது முக்கியமல்ல; என்ன செய்கிறாய் என்பது தான் முக்கியம் .ஆகவே உறுதியான உள்ளமும்,நன்னடத்தையில் வலிமையும் நேர்மையான போக்கும் கொண்டவர்களுக்கு இந்த வையகம்,அளிக்கும் ஏராளமான நல்ல சந்தர்பங்களை எண்ணிப்பார்.


 

No comments:

Post a Comment